Story - வாலை தொட்டால் போதும்

ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.

அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான். இளையனே நீ என்மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.
அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.

மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.

அதைப் பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி அடுத்த மாட்டை பார்க்கலாம் என்று விட்டு விட்டான்.

சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம்.
அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம் , மூன்றவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.

ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.

இந்த மாட்டை விடக்கூடாது. இதைத்தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான்.

மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம்.அந்த மாட்டுக்கு வாலே இல்லை.

​நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.​

​சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு , மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்) அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.​

​ஆகவே, வாய்ப்புகளை பயன் படுத்துவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது...​

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment